SHIRDI LIVE DARSHAN

Monday 30 January 2012

அரசியல் ஜே. கிருஷ்ணமூர்த்தி


அரசியல்


ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)




உயரே - மலைகளின் மீது நாள் முழுதும் மழை பொழிந்து கொண்டிருந்தது. மழையென்றால் தூவானமோ, இதமும் மிருதுவுமான மழையோ அல்ல. வெள்ளம் பிரவகித்து ஓட - சாலைகளைக் கழுவிச் செல்கிற, மண்ணரித்து ஓடுவதால் மலைச்சரிவின் மரங்களை வேருடன் பெயர்க்கிற, நிலச் சரிவுகளை உண்டாக்குகிற, திடாரென்று 'கிறீச் 'சிட்டு நுரைபுரண்டோடி சில மணி நேரங்களில் மெளனமாகிப் போகிற நீரோடைகளை உண்டாக்குகிற - 'சோ 'வெனக் கொட்டுகிற அடைமழை. ஒரு சிறு பையன் - மேனி முழுவதும் ஈரத்தில் அமிழ்ந்து போகிற அளவிற்கு நனைந்த பின்னும் - மழைநீர் தேங்கி ஓடுகிற ஒரு சிறு குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் - தன் தாயின் உரத்த மற்றும் கோபம் மிகுந்த கட்டளைகளுக்குச் சற்றும் செவி சாய்க்கவில்லை. அந்த மண் ரோடிலே நாங்கள் மேலேறி கொண்டிருந்தபோது, ஒரு பசு கீழிறங்கிக் கொண்டிருந்தது. மேகங்கள் மடை திறந்து கொட்டி, நிலத்தை நீரால் மூடுவது போலிருந்தது. நாங்கள் முற்றிலும் நனைந்து போயிருந்தோம். ஆதலால், எங்கள் ஆடைகளின் பெரும்பகுதியைக் கழற்றி விட்டோம். வெற்று மேனிக்கு மழை பரவசமாக இருந்தது. இன்னும் உயரே, மலை உச்சிக்கருகில் அந்த வீடு இருந்தது; நகரம் கீழே விழுந்து கிடந்தது. மேற்திசையிலிருந்து வீசிய பலத்த காற்று, மேலும் கருமையையும், வெகுண்ட மேகங்களையும் கொணர்ந்தது.

அறையினுள்ளே தீ எரிந்து கொண்டிருந்தது. நிறைய பேர் விவாதிப்பதற்காகக் காத்திருந்தார்கள். ஜன்னல்களின் மீது அறைந்து மோதிய பின் விழுந்த மழை நீர், நிலத்தில் ஒரு பெரிய குழியை உண்டாக்கியிருந்தது. புகைபோக்கியின் வழியாகக் கூட கீழே விழுந்த மழைநீர் - தீயை அங்குமிங்கும் அலைக்கழித்து, தெறித்து தெறித்து எரிய வைத்தது.

அவர் ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதி; சொல்வதைச் செய்பவர்; மிகவும் நேர்மையானவர்; பழுத்த தேசபக்தர். குறுகிய மனப்பான்மையோ சுயநலமோ இல்லாத அவரின் குறிக்கோள்கள் அவருக்காக அல்ல - அவரின் கொள்கைகளுக்காகவும், மக்களுக்காகவுமே. அவர் கேட்போரை மயக்குகிற வெறும் வார்த்தைச் சித்தரோ, வாக்கு வங்கியோ அல்ல. அவருடைய இலட்சியங்களுக்காக அவர் துன்புற்றிருக்கிறார்; ஆனால், அரிதான வகையில், அவர் மனத்திலே கசப்போ வஞ்சமோ இல்லை. பார்ப்பதற்கு ஓர் அரசியல்வாதி என்பதை விட, அவர் ஓர் அறிஞராக அதிகம் தெரிந்தார். ஆனால், அரசியல் அவர் உயிர்மூச்சாக இருந்தது. அவர் கட்சி - அவர் கட்டளைக்கு ஒருவிதமான பயத்துடன் கீழ்படிந்தது. அவர் கனவுகள் காண்பவர். ஆனால், அரசியலுக்காக அவர் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டார். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான அவர் நண்பரும் அவருடன் இருந்தார். அரசாங்கத்தின் கணக்கற்ற வருமானத்தைப் பகிர்ந்தளிப்பது, செலவளிப்பது குறித்து அந்த நண்பர் சிக்கலானக் கோட்பாடுகளையும், விவரங்களையும் கொண்டிருந்தார். அவர் இடதுசாரி மற்றும் வலதுசாரிப் பொருளாதார சிந்தனைகளுடன் பரிச்சயம் கொண்டவராகக் காட்சியளித்த போதிலும், மனிதகுலத்தின் பொருளாதார விடுதலைக்கு அவருக்கென்று சொந்தக் கோட்பாடுகள் இருந்தன. அவர் 'திறனறிந்து சொல்லுக சொல்லை ' என்பது போல சரளமாகவும், தயக்கமின்றியும், தெளிவாகவும் பேசினார். இருவரும், கேட்பார்ப் பிணிக்கும் தகையவராய், கேளாரும் வேட்ப மொழிந்து - பெருங்கூட்டத்தை வசீகரப்படுத்தினர்.

செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் - அரசியலுக்கும், அரசியல்வாதிகளின் பேச்சிற்கும், அவர்களின் செயல்களுக்கும் - கொடுக்கப்படுகிற இடத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? நிச்சயமாக, மற்ற செய்திகளும் இடம் பெறுகின்றன. ஆனால், அரசியல் தொடர்புடைய செய்திகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கை எல்லா முக்கியத்துவமும் பெற்றதாக மாறிவிட்டது. புறவயமான வெளிச் சூழ்நிலைகள் - வசதி, பணம், பதவி மற்றும் அதிகாரம் ஆகியவை - நம்மை ஆள்வதாகவும், நம் இருத்தலை நிர்ணயிப்பனவாகவும் மாறிவிட்டன. புறவயமான வெளிக் காட்சிகள் - பட்டங்கள், பிரத்யேக ஆடைகள், மரியாதைகள், கொடிகள் ஆகியவை - மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்றவையாக மாறி, வாழ்வின் மொத்த இயக்கம் (total process of life) மறக்கப்பட்டு அல்லது வேண்டுமென்றே வேண்டாமென்று தள்ளி வைக்கப்பட்டு விட்டது. சமூக அல்லது அரசியல் செயல்பாடுகளில் ஒருவர் விழுவதும் அல்லது ஒருவரை தள்ளுவதும் வாழ்க்கையை அதன் மொத்தத்தில் முழுமையாகப் புரிந்து கொள்வதைவிடவும் மிகவும் சுலபமானது. ஒழுங்குபடுத்தப்பட்ட எண்ணத்துடன் - அரசியல் அல்லது மதரீதியான செயல்பாடுகளுடன் இணைந்திருத்தல் - அற்பமும் இழிவும் நிறைந்த தினசரி வாழ்விலிருந்து ஒரு மரியாதைக்குரிய தப்பித்தல் அளிக்கிறது. சிறிய இதயத்துடன் நீங்கள் பெரிய விஷயங்களைப் பற்றியும், பிரசித்திப் பெற்ற தலைவர்களைப் பற்றியும் பேசலாம். நீங்கள் உங்களின் ஆழமற்றத்தன்மையை, உலக வாழ்க்கை குறித்த எதுகை-மோனைகளுடன் மறைத்துக் கொள்ளலாம். உங்களின் அமைதியற்ற மனம் - சந்தோஷத்துடனும் உலகம் தருகிற உற்சாகத்துடனும் நிலை கொண்டு - புதிய அல்லது பழைய மத சாஸ்திரங்களின் கொள்கைகளைப் பரப்பலாம்.

அரசியல் என்பது விளைவுகளின் சமரசம் ஆகும். நம்மில் பெரும்பாலோர் விளைவுகள் குறித்து கவலை கொண்டிருக்கிறோம். புறமானது ஆதிக்கம் செலுத்தக் கூடிய முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விளைவுகளைச் சாதுரியமாகக் கையாளுவதன் மூலம் (by manipulating effects), சட்டத்தையும் அமைதியையும் கொணர நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு முழுமையான இயக்கம் - அகமும் அதேபோல் புறமும். புறம் நிச்சயம் அகத்தைப் பாதிக்கிறது. ஆனால், அகமானது எப்போதும் புறத்தைப் புறந்தள்ளி மேற்செல்கிறது. நீங்கள் யார் என்பதை, நீங்கள் புறத்தின் வழி வெளிக் கொணர்கிறீர்கள். புறத்தையும் அகத்தையும் தனித்தனியே பிரித்து சீலிடப்பட்ட அறைகளுக்குள் அடைத்துவிட முடியாது. ஏனெனில், அவையிரண்டும் எப்போதும் நிலையாக ஒன்றுடன் ஒன்று உறவாடி வருபவை. ஆனால், அகவயமான தாகங்கள், ஒளிந்துள்ள நோக்கங்கள், தேடல்கள் - எப்போதும் மற்றவற்றைவிடவும் மிகவும் வலிமையானவை. வாழ்க்கையானது அரசியல் அல்லது பொருளாதாரச் செயல்களைச் சார்ந்து அமைவதில்லை. மரமானது இலையும் கிளையும் மட்டுமே அல்ல என்பது போல், வாழ்க்கை என்பது வெறும் புறவயமான வெளிக்காட்சி அல்ல. வாழ்க்கை என்பது ஒரு முழுமையான இயக்கம் - அதன் அழகானது அதன் ஒருமைப்பாட்டில் (integration) கண்டடையப்பட வேண்டும். இந்த ஒருமைப்பாடு அரசியல் மற்றும் பொருளாதார சமரசங்கள் என்னும் மேலோட்டமான நிலையிலே நிகழ்வதில்லை. அது காரணங்களுக்கும், விளைவுகளுக்கும் அப்பால் காணப்பட வேண்டும்.

நாம் காரணங்களுடனும், விளைவுகளுடனும் விளையாடுகிற காரணத்தால் - நாம் அவற்றை ஒருபோதும் தாண்டிச் செல்வதில்லை - வாய் வார்த்தைகளில் தவிர; அதனால், நமது வாழ்க்கை ஒன்றுமற்ற வெறுமையாய், முக்கியத்துவம் ஏதுமற்றதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே, நாம் அரசியல் உத்வேகங்களுக்கும், மதரீதியான உணர்வுகளுக்கும் அடிமைகளாக மாறிப்போய் இருக்கிறோம். நம்மை உண்டாக்குகிற பல்வேறு இயக்கங்களின் பரிபூரண ஒருமைப்பாட்டில்தான் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. இந்த ஒருமைப்பாடு எந்தக் கொள்கையின் மூலமாகவோ, அரசியல் அல்லது மதரீதியான என்று எந்த ஒரு தலைமையைப் பின்பற்றுவதன் மூலமாகவோ வருவதில்லை. அது பரந்த மற்றும் ஆழமான விழிப்புணர்வு நிலையின் மூலமே வருகிறது. இந்த விழிப்புணர்வு நிலை - மனத்தின் மேலோட்டமான மறுமொழிகளில் மயங்கி நின்று விடாமல், அதன் ஆழமானப் படலங்களுக்கிடையே நிச்சயம் ஊடுருவி உள்செல்ல வேண்டும்.

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் - வரிசை: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi])

No comments:

Post a Comment