SHIRDI LIVE DARSHAN

Tuesday 31 January 2012

முன்ஜென்மம் உண்மையா?



நீங்கள் முன்னர் இங்கே இருந்திருக்கிறீர்கள்!
 
ங்களுக்கு எதையாவது பார்த்ததும் மரண பயம் ஏற்படுகிறதா? உங்களுக்கு முன் ஜென் மம் இருக்கக்கூடும்!முற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆராய்ச்சியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் எடித் ஃபையர். ஹிப்னாடிச முறையில் முற்பிறவி நினைவுளைக் கண்டறிபவர். ஒரு பெண்ணுக்குத் தண்ணீரைக் கண்டாலே கண்ணீர் வரும். நீர்நிலைகள் எங்கே இருந்தாலும் மிரள்வார். பயந்து நடுங்குவார். வயதான பின்பும்கூட இந்தப் பயம் அவரை ஆட்டிப் படைத்தது. பயத்துக்கான காரணம் அறிய அவர் எடித் ஃபையரைத் தொடர்புகொண்டார். எடித் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவி நினைவுகளை ஆய்வு செய்தார். முதல் பிறவியில் அவர் சிறுமியாக இருந்தபோது, ஏரியில் படகில் சென்று விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்திருக்கிறார். இரண்டாவது பிறவியில் மீனவராகப் பிறந்து புயலில் சிக்கி இறந்திருக்கிறார். மூன்றாவது பிறவியில் மாலுமியாக இருக்கும்போது, கப்பல் கவிழ்ந்து இறந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அவரது ஆன்மாவில் படிந்து அச்ச உணர்வே தோற்றுவித்திருக்கிறது. மெள்ள மெள்ள முன்ஜென்ம நினைவுகளை மறக்கச் செய்து தண்ணீர் பயத்தைப் போக்கினார் எடித் ஃபையர்.
உயரமான இடம் என்றாலே ஓடி ஒளிகிற தொழிலதிபரை ஆய்வுக்கு உட்படுத்தினார் எடித்.
இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவர்முற்பிறவியில் ஒரு கூலி வேலையாளாக சர்ச் ஓடுகளைப் பழுதுபார்த்துக்கொண்டு இருந்தபோது கீழே விழுந்து இறந்திருக்கிறார். அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து, மறுபிறவியிலும் பயம் காட்டிக்கொண்டு இருந்திருக்கிறது. மனோதத்துவ சிகிச்சை மூலமாக அவரது எண்ணத்தில் பதிந்திருந்த பயத்தைப் போக்கினார் எடித்.
‘அசையும் பொருள் எதைக் கண்டாலும் பாம்பு ஞாபகம் வருகிறது. தினமும் கனவில் பாம்பு தீண்டி மரணம் அடைகிறேன்!’ என்று எடித்தைத் தேடி வந்தார் ஒரு பெண். முற்பிறவியில் அந்தப் பெண் அரசரின் அவையில் ஒரு நடனக்காரியாக இருந்தார் என்பதையும், ஒரு விழா சமயத்தில் விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக்கொண்டு பாம்பு நடனம் ஆடும்போது, பாம்புகள் கடித்து மரணம் அடைந்தார் என்பதையும் கண்டுபிடித்தார் எடித். இவருக்கும் மனோதத்துவ முறையில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்திய எடித், தன் அனுபவங்களைத் தொகுத்து ‘YOU HAVE BEEN HERE BEFORE’ என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார்!

உங்களுக்குத் தெரியுமா ஸ்டீவன்சன் பாஸ்வேர்டு?
 
திகில் படங்களுக்கு ஹிட்ச்காக் மாதிரி மறு ஜென்ம ஆராய்ச்சிக்கு ஸ்டீவன்சன். வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இவர், மறுபிறவி பற்றி 40 வருடங்கள் ஆராய்ச்சி செய்தவர். மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் அத்தனை பேருக்கும் இவரின் கட்டுரைகளும், புத்தகங்களும்தான் அரிச்சுவடி.
லெபனான் நாட்டில் உள்ள கோர்னெல் எனும் இடத்தைச் சேர்ந்தவன் இமத் இலவர் என்னும் இரண்டு வயதுச் சிறுவன். திடீரென அவன் தனக்குச் சம்பந்தம் இல்லாத ஜமீலா மற்றும் மஹ்மூத் என்கிற பெயர்களை அடிக்கடி உச்சரித்தான். ஒரு முறை தெருவில் நடந்து சென்ற வயதான பெரிய வரை, ‘தன் பக்கத்து வீட்டுக்காரர்’ என்று சொல்லிப் பின் தொடர்ந்தான். ”என் பெயர் இப்ராஹிம். ‘க்ரீபி’ நகரத்தைச் சேர்ந்தவன். 1949-ல் டி.பி. நோயால் இறந்துவிட்டேன். நான் உடனடியாக மனைவி, குழந்தைகளைப் பார்க்க வேண்டும்!” என்று அழுது அடம்பிடித்திருக்கிறான். இதையறிந்த ஸ்டீவன்சன் கோர்னெல் கிராமத்துக்கு வந்து, இமத்தைச் சந்தித்தார். அந்த ஊரில் இருந்து சுமார் 25 மைல் தொலைவில் ‘க்ரீபி’ என்கிற கிராமம் இருப்பதை அறிந்து, இமத்தை அங்கே கூட்டிச் சென்றார். போகிற வழியில் வயதுக்கு மீறிப் பேசிய இமத், தன் வீட்டை, மனைவி, குழந்தைகளைச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறான். தன் பால்ய கால நண்பன் மஹ்மூத், நெருக்கமான தொடர்பில் இருந்த பாலியல் தொழிலாளி ஜமீலா இரு வரின் பெயரைத்தான் இமத் அடிக்கடி உச்சரித்திருக்கிறான் என்பதை ஸ்டீவன்சன் கண்டுபிடித்தார். ”சிறுவன் இமத் தனது முற்பிறவிபற்றிக் கூறிய 57 கருத்துக்களில் 51 கருத்துக்கள் சரியாக இருந்தன. மீதி ஆறும் அவன் சிறுவன் என்பதால் சரியாக விளக்கிச் சொல்ல முடியாததால் ஏற்பட்ட கருத்துப் பிழையாக இருக்கலாம்!” என்றார் ஸ்டீவன்சன். முன் ஜென்மம்பற்றிய ஆராய்ச்சிகளுக்காக ஆப்பிரிக்கா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என்று பல நாடுகள் சுற்றியிருக்கிறார் இவர். ஆராய்ச்சிக் காலத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘மறுபிறவி கேஸ்’களைச் சந்தித்திருக்கிறார். ”எந்தக் குழந்தைக்காவது முன்ஜென்மம் குறித்து நினைவுகள் வரக்கூடுமானால், அது இரண்டில் இருந்து நான்கு வயதுக்குள்தான் அதிகளவில் வர ஆரம்பிக்கும். அந்தக் காலகட்டத்தில் அந்தக் குழந்தைகள் தெரிவிக்கும் சம்பந்தம் இல்லாத விஷயங்களைக் கவனித்து ஆராய வேண்டும். முன்ஜென்ம நினைவுகள் ஏழு வயதுக்குப் பின் அதிகம் வருவது இல்லை. அதன் பிறகு நினைவுக்கு வரும் பல தகவல்களை வளர்ந்த குழந்தை ஒதுக்கித் தள்ளி விடுகிறது. முன் ஜென்ம நினைவுகளில் அதிகம் நினைவுக்கு வருவது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மரணமடைந்த விதம்தான். ‘முற்பிறவியில் என்னவிதமான மரணம் ஏற்பட்டது?’ என்று குழந்தைகள் சொல்லும் தகவலை, இறந்தவர்களின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டோடு ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்தார் ஸ்டீவன்சன். பெரும்பாலான மருத்துவர்கள் அவரது ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
சிக்கலான முடிச்சு ஒன்றைப் போட்டுவிட்டே மண்ணைவிட்டு மறைந்தார் ஸ்டீவன்சன். தன்னுடைய கடைசிக் காலத்தில் ஃபைல்கள் அடுக்கிவைக்கும் காபினெட் ஒன்றை வாங்கியவர், அதைப் பூட்ட ஸ்பெஷல் பூட்டு ஒன்றை உருவாக்கினார். குறிப்பிட்ட வார்த்தை அல்லது வாக்கியம் ஒன்றை செட் பண்ணினால் மட்டுமே அந்தப் பூட்டு திறக்கும். அந்த ‘பாஸ்வேர்டை’ வேறு யாருக்கும் சொல்லாமல் இறந்துவிட்டார் அவர். ‘தனது ‘மறுபிறவி’ யாராவது தோன்றி, தன் நினைவுகள் வந்து, அவன் மூலமாக தன் பாஸ்வேர்டு வெளிப்படும். அப்போது இந்த உலகம் மறுஜென்மத்தை நம்பும்’ என்பது ஸ்டீவன்சனின் அசாத்திய நம்பிக்கை. பூட்டைத் திறக்க உலகமே காத்திருக்கிறது!
—————————
ஜென்மம் எக்ஸ்!
 
துர்மரணங்களே மறுஜென்மத்தின் திறவுகோல்! ‘விபத்து, நோய், தற்கொலை என நிறைவேறாத ஆசைகளோடு துள்ளத் துடிக்க இறந்துபோகிறவர்களே மறுஜென்மம் எடுக்கிறார்கள்’ என்பது வடஇந்தியர்களின் கருத்து. அதை நிரூபிப்பதுபோலப் பல சம்பவங்கள் அங்கு அரங்கேறிஇருக்கின்றன. சில சாம்பிள் சம்பவங்கள்…ஹாத்தரசுக்கு 60 கி.மீ தூரத்தில் உள்ள கடுமுக்தேஷ்வர் நகரத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஈஷ்வர் எனும் நான்கு வயதுச் சிறுவன் திடீர் எனத் தன் முன்ஜென்மம் குறித்துப் பேசினான்.
”ஆறு வருடங்களுக்கு முன்பு புலந்த்ஷெஹரில் பிறந்தேன். என்து பெயர் வீர்பால். நான் ஆக்ராவுக்கு அருகில் உள்ள ஃபரீதாபாத்தின் விநாயக் ஃபேக்டரியில் எலெக்ட்ரீஷியனாக வேலை செய்தேன். ஒருநாள் ஷாக் அடித்து இறந்துவிட்டேன். இன்னும் என் மனைவி மற்றும் குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள். என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள்” என அடிக்கடி வற்புறுத்த, பெற்றோர்களும் அவனை அழைத்துச் சென்றார்கள். வீர்பாலின் வீடு, மனைவி ராணி, மூன்று குழந்தைகள், தொழிற்சாலை நண்பர்கள் என அனைவரையும் சரியாக அடையாளம் காட்டி ஆச்சர்யம் கொடுத்திருக்கிறான் ஈஷ்வர்!
உத்தரப்பிரதேசத்தில் ஒரு சிறுமி, ‘விண்வெளி விபத்தில் இறந்துபோன கல்பனா சாவ்லா நான்தான்!’ என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை கல்பனா சாவ்லாவின் பெற்றோரிடம் அழைத்துச் சென்றபோது, அவர்களைச் சரியாக அடையா ளம் காட்டினாள். ‘என் முகம் பலமுறை மீடியாவில் வந்திருக்கிறது. எனவே, என்னை அடையாளம் கண்டு பிடிப் பது பெரிய விஷயமல்ல’ என்று மறுஜென்ம விஷயத்தை மறுத்துவிட்டார் சாவ்லாவின் தந்தை!
ராஜஸ்தானின் அழ்வார் மாவட்டத்தின் மிலக்பூர் கிராமத்தில் இரண்டரை வயதுச் சிறுமி மனீஷா. ‘உண்மையின் நான் மனீஷா இல்லை. டெல்லி புஷ்ப விஹாரைச் சேர்ந்த சுமன். என்னுடைய 15-வது வயதில் டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டேன்!’ என்றாள். மனீஷாவின் பெற்றோர்களும் அவளை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே சுமனின் பெற்றோர்களைக் கண்டதுமே ஓடிப் போய் கட்டிப்பிடித்துக்கொண்டாள். சுமன் படித்த ஆந்திரா எஜுகேஷனல் சொசைட்டி பள்ளியையும், அவனது நண்பர்களையும் சரியாக அடையாளம் காட்டி அசரவைத்திருக்கிறாள் மனீஷா.
என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது!

No comments:

Post a Comment