SHIRDI LIVE DARSHAN

Sunday 11 March 2012

பாபா காட்டிய நவ பக்தி





ஒரு முறை பூனாவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர் என்பவர் பாபாவைக் காணவந்தார். அவர் பாபாவின் பாதங்களில் விழுந்து உரிய வழிபாட்டை நிகழ்த்திய பின்பு, “நான் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள் போன்றவற்றை பயின்றும், புராணங்களைக் கேட்டும் இருக்கிறேன். இருப்பினும், எனக்கு மன அமைதி இல்லை. என் கல்வியறிவு அனைத்தும் வீண் என நினைக்கிறேன். எளிய, ஒன்றும் அறியாத பக்தியுள்ளவர்களே என்னை விடச் சிறந்தவர்கள். மனம் அடங்கினாலன்றி எந்த நூலரிவினாலும் பயனில்லை. தாங்கள் என்மீது இறக்கம் கொண்டு என்னை ஆசிர்வதியுங்கள்” என்றார்.



பாபா அவரிடம் ஒரு உருவக் கதையைச் சொன்னார்.
ஒரு வணிகன் இங்கு வந்தபோது, அவன் முன்னாள் ஒரு குதிரை இங்கு ஒன்பது உருண்டைகளாகச் சாணம் இட்டது. வணிகன் தான் ஆர்வத்தினால் மனமார்ந்த அக்கறையுடன் வேட்டியினை விரித்து அந்த ஒன்பது உருண்டைகளையும் அதில் சேகரித்தான். அதன் மூலம் அவன் மன ஒருமைப்பாட்டை அடைந்தான் என்றார் பாபா.
பாடண்கருக்கு இந்த கதையின் உட்பொருள் விளங்கவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, கணேசு தாமோதர் என்கிற தாதா கேள்கரிடம், “பாபா இதன் மூலம் என்ன சொல்கிறார்? என்று கேட்டார்”.
அதற்கு அவர், “பாபா என்ன பொருள் சொல்கிறார்? என்ன பொருள் கொள்கிறார்? என்று எனக்குத் தெரியாது. அவருடைய அகதூண்டுதலால் நான் தெரிந்து கொண்டதைச் சொல்கிறேன். குதிரை கடவுளின் அருள், வெளிப்பட்ட உருண்டைகள் பக்தியின் ரூபங்கள், வகைகள். அதாவது, 1.கேட்டல், 2 .வேண்டுதல், 3.நினைவுறுத்திக் கொள்ளுதல், 4.பாதங்களைத் தஞ்சமடைதல், 5.பூசை, 6.வணங்குதல், 7.சேவை 8.நட்பு, 9.தன்னையே இறைவனுக்கு அளித்தல்.
இவை பக்தியின் ஒன்பது வகையான விதங்கள். இவைகளில் எதுவானாலும் நம்பிக்கையுடன் பின்பற்றட்டால் இறைவன் தன் பக்தன் முன்பு தாமாகவே வெளிபடுவார்.
எல்லாச் சாதனைகளும், அதாவது தவம்,யோகப் பயிற்சி வேத பாராயணம், அவைகளின் வியாக்யானப் பேச்சு ஆகியவையாவும் பக்தியுடன் சேர்ந்திருந்தால் அன்றி முழுவதுமே பயனற்றவையாகும், வேத ஞானம் அல்லது பெரும் ஞானியென்ற புகழ், சம்பிரதாயமான பசனை போன்றவை பயனில்லை. அன்பான பக்தியே தேவையான ஒன்றாகும். வணிகனைப் போன்றோ உங்களைக் கருதிக் கொள்ளுங்கள். ஒன்பது வகை பக்தியை விளைவிப்பதில் அல்லது சேகரிப்பதில் அவன் கொண்டதைப் போன்ற கவலையுடனும் ஆர்வத்துடனும் இருங்கள். அப்போது நீங்கள் நிலையான முடிவையும், மன அமைதியையும் அடைவீர்கள்’ என்று விளக்கம் தந்தார் கணேசு தாமோதர்.
அடுத்த நாள் பாடண்கர் பாபாவை வணங்கச் சென்ற போது, பாபா அவரை ஒன்பது சாண உருண்டைகளைச் சேகரித்தீர்களா? என்று கேட்டார், அதற்க்கு அவர் தான் ஒரு எளியவனாக இருப்பதால் பாபா அவருக்கு முதலில் அருள் செய்ய வேண்டும் என்றும், பின்னர் அவைகளை எளிதாகச் சேர்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு பாபா அவரை ஆசிர்வதித்து, “மன அமைதியையும், நன்மையையும் அடைவாய்” எனக் கூறி ஆருதலளித்தார்.

No comments:

Post a Comment