ஸ்ரீ அகத்தியர் துதி
கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே ...!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ...!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே ....!
வேந்தன்நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னநின் கடமை அன்றோ ...!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய் !
காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை
நாவாயும் புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்
பேய்வாயினின்றும் மீட்ட பெருமானே - என்றும்
தாயாய் இருந்தே காப்பாய் ! தலைவைத்தேன் நினதுதாளே சரணம் !
ஓம் ஸ்ரீ அகஸ்த்தியாய நமோ நமஹ ..........!