SHIRDI LIVE DARSHAN

Wednesday 1 February 2012

இளைஞர்களின் லட்சியப் புருஷர் அனுமன் – சுவாமி விவேகானந்தர்


இளைஞர்களின் லட்சியப் புருஷர் அனுமன் – சுவாமி விவேகானந்தர்



மகாவீரராகிய அனுமனை உங்கள் இலட்சிய புருஷராகக்கொள்ள வேண்டும். பகவான் ராமச்சந்திரரின் கட்டளையால் அவர் எப்படிக் கடலையே தாண்டினார் என்பதைப் பார். வாழ்வினைப் பற்றியோ, சாவினைப் பற்றியோ அவர் கவலைப்படவே இல்லை. அவர் முழுக்க முழுக்க புலன்களை வென்றவர். ஆச்சரியப்படத்தக்க அறிவுக் கூர்மை வாய்ந்தவர். நீ இப்போது உன் வாழ்வை அவரைப் போல் மகத்தான சேவை செய்யும் வகையில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலம் மற்ற இலட்சியங்கள் அனைத்தும் படிப்படியாக உன் வாழ்வில் வெளிப்படும். எதிர்த்துப் பேசாமல் குருவின் கட்டளைகளை ஏற்றல், பிரம்மச்சரியத்தைக் கடுமையாகப் பின்பற்றுதல், இந்த இரண்டும்தான் வெற்றிகளின் ரகசியம். அனுமன் ஒரு பக்கம் சேவையின் இலட்சியமாக விளங்குகிறார். மற்றொரு பக்கத்தில் உலகம் முழுவதும் நடுங்கச் செய்கின்ற சிங்கம் போன்ற தைரியத்தின் வடிவமாகவும் விளங்குகிறார்.
ஸ்ரீராமனின் நலனுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்வதில் அவருக்குச் சிறிது கூடத் தயக்கம் கிடையாது. இராமனுக்குச் செவை செய்வது என்பதைத் தவிர பிரம்மா, சிவன் நிலை கிடைப்பதென்றாலும் அது பற்றிச் சிறிது கூட நினைப்பே இல்லாத மனம் கொண்டவராக அவர் இருக்கிறார். அவர் வாழ்வின் இலட்சியம் ஸ்ரீராமனின் கட்டளையை நிறைவேற்றுவது ஒன்றே. அதைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அத்தகைய முழுக்க முழுக்கத் தன்னைத் துறக்கும் பக்திதான் தற்போது வேண்டப்படுவது. ஒவ்வொரு துறையிலும், தவ மனப்பான்மையோடு கூடிய ஆண்மை வாழ்வைக் கொண்டு வர வேண்டும். அத்தகைய இலட்சியங்களைப் பின்பற்றுதலில்தான் இந்த நாட்டின், நாட்டு மக்களின் நன்மை அடங்கி இருக்கிறது. இத்தகைய இலட்சியங்களின் மீது உங்கள் குணங்களை அமைத்துக் காண்பீர்களானால் ஆயிரக் கணக்கானவர்கள் உங்களைப் பின்பற்றுவார்கள்.
ஆனால் அந்த இலட்சியத்திலிருந்து ஓர் அங்குலம் விட்டு விலகாமல் இருக்கும்படி உன்னை நீ பார்த்துக் கொள். எந்தக் காலத்திலும் தைரியத்தை இழக்காதே. சாப்பிடும்போதும், உடுத்தும்போதும், படுக்கும்போதும், பாடும்போதும், விளையாடும் போதும், மகிழ்ச்சியிலும், நோயிலும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத்துடன் கூடிய தைரியத்தை உன்னிடமிருந்து வெளிப்படுத்து. அதன் பிறகுதான் மகாசக்தியான அன்னையின் கருணையைப் பெறுவாய்.

No comments:

Post a Comment