SHIRDI LIVE DARSHAN

Saturday 18 February 2012

கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன்

கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?

ஒரு ஆசிரமம் .அங்கே ஒரு குருநாதர் இருந்தார் , அவரை தேடிகிட்டு போனான்  ஒருத்தன் .குருநாதர் அவனை நிமிர்ந்து பார்த்தார்

உனக்கு என்ன வேணும் ? ன்னு கேட்டார்

ஐயா நான் கவுளை பார்க்கணும் சொன்னான்

அதுக்கு ஏன் என்னை தேடிகிட்டு வந்தே ? ன்னு கேட்டார்

விவரம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன் , கடவுளை எப்படி பார்க்கிறது .. எப்படி அவரோட பேசறது ? எந்த மொழியில பேசணும் ? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன் .. ன்னு சொன்னான்

சரி புறப்படு ! ன்னார்

எங்கே ? ன்னான்

இங்கே இருக்கிற சீடர்கள் சில பேரை பார்த்துட்டு வரலாம் .. வா -- அப்படின்னு சொல்லி அவனை அழைச்சிட்டு புறப்பட்டார் .

இவன் அவர் பின்னாடியே போனான் .அங்கே ஒரு மரத்தடியில் இரண்டு சீடர்கள் உக்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க

அவங்களை சுட்டி காட்டி ," அதோ பார் அவங்க என்ன செஞ்சுகிட்டுருக்காங்க ?-
அப்படி ன்னு கேட்டார்

ஒருத்தன் இன்னொருவன்  கிட்ட பேசிகிட்டு இருக்கான் ! ன்னான்.

அடுத்தபடியா  இன்னொரு மரத்தடியில் ஒரு சீடன் , தனியா உக்கார்ந்து இருக்கான்

அவனை சுட்டி காட்டி ," அதோ பார் அவன் என்ன செஞ்சிகிட்டு இருக்கான் ? ன்னு கேட்டார்

அவன் என்ன சும்மாதான் இருக்கான் - அப்படின்னான்

குருநாதர் சிரிச்சி கிட்டே விளக்கம் கொடுத்தார்

முதல் மரத்தடியிலே பாத்தியே .. அங்கே ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசி கொண்டிருந்தான்

"இரண்டாவது ஒரு மரத்தடியிலே பாத்தியே அங்கே ஒரு மனிதன் கடவுளோடு பேசி கொண்டிருக்கிறான் " - அப்படின்னார்

இதை கேட்டதும் இவன் இன்னும் குழம்பி போயிட்டான்

என்ன சொல்றிங்க ? ன்னான்

அவர் சொன்னார் :

  " இதோ பாருப்பா .. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும் னா

அதுக்கு மொழிதான் தொடர்ப்பு சாதனம் .

ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு " மௌனம் " தான்

தொடர்பு சாதனம் .

அதனாலே நீ கடவுளோட தொடர்பு  கொள்ள விரும்பினால் மௌனமாக இரு ..

மனிதனோட தொடர்பு  கொள்ள விரும்பினால் நீ பேசு ! அப்படின்னார் .

வந்தவன் யோசிக்க ஆரம்பிச்சான்  கடவுளோடு எந்த மொழியிலே பேசணும்ங்கறதையும் புரிஞ்சுகிட்டான் . அந்த கடவுள் தனக்குள்ளே இருக்கிற ஓர்  உண்மை - அப்படிங்கிறதையும் புரிஞ்சுகிட்டான் .

ஓஷோ என்ன சொல்றார் தெரியுமா ?

" நீ பிறந்த பொது மௌனத்தை தான் உலகத்துக்கு கொண்டு வந்தாய் . மொழி உனக்கு தரப்பட்டது .சமூகத்துடன் பழகுவதற்கு அது ஓர் அன்பளிப்பு . அது ஓர் கருவி . அது ஓர் சாதனம் . ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டு வந்தது . அந்த மௌனத்தை நீ மீண்டும் அடைய முயற்சி செய் .... அதுதான் நீ மீண்டும் குழந்தை ஆவதற்கு வழி....

மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ? உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள் . அந்த  கடவுளோடு  பேச விரும்புகிறவர்கள் கற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம் . இதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை . இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது நமது கடமை .
                     ------------------------------------------------------
நம்ம ஆள் ஒருத்தர்  கடவுளை பார்க்கணும்னு ஆசைப்பட்டார்

நான் உங்களுக்கு கடவுளை காட்றேன்னு சொன்னங்க அவங்க மனைவி .

நாலு நாள் பட்டினி போட்டாங்க ...கணவனுக்கு சாப்பாடே கிடையாது

அஞ்சாவது நாள் அவரை உக்கார வச்சி இலையை போட்டு சாப்பாடு போட்டாங்க ... பட்டினி கிடந்தவர் சாப்பாட்டை பார்த்தார் .

" நான் கடவுளை பார்த்திட்டேன் ! னு கத்தினார் .

எங்கே ? ன்னாங்க அந்த அம்மா .

"இதோ இந்த சாப்பாடு தான் இப்ப எனக்கு கடவுள் !" அப்படின்னு சொல்லிபுட்டு அவசர அவசரமா சாப்பிட ஆரம்பிச்சார் அவர் .


                                                                        ------- தென்கச்சி கோ சுவாமிநாதன்
                                                                       


No comments:

Post a Comment